Feed the Fishes

Don't forget to feed the fishes by clicking over the water, coz they are hungry

Pages

Wednesday, September 15, 2010

மன அமைதி....

அமைதி என்பது நம் உள்ளம் சார்ந்த விஷயமே. எந்த இடத்தில் இருந்தாலும் மனம் கூடவே தான் இருக்கும். அமைதியைத் தேடி மலைகளுக்குச் செல்கிறீர்கள் என்றால், மலை அமைதியாக இருப்பதாகத் தான் அர்த்தமே தவிர நீங்கள் அமைதியாக இருப்பதாக அர்த்தம் அல்ல. இரைச்சல் மிக்க சந்தைக்கு நடுவிலும் அமைதியாக இருக்க முடிந்தால் தான் நீங்கள் அமைதியானவராக இருப்பதாக அர்த்தம்.
மகிழ்ச்சியாக இருக்கும் போது, உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களுக்கு நீங்கள் அற்புதமான மனிதர் தான். ஆனால், மகிழ்ச்சியின்றி இருக்கும்போது, இந்த உலகுக்கு நீங்கள் ஒரு ஆபத்தான மனிதர். நமது மனநிலை நாம் இருக்கும் சூழ்நிலையை வெகுவாகப் பாதிக்கிறது.
உங்கள் வாழ்வின் மிக அழகான தருணங்கள் நீங்கள் மகிழ்ச்சியைத் தேடிக் கொண்டு இருந்த கணங்கள் அல்ல. நீங்கள் மனமகிழ்ச்சியை வெளிப்படுத்திய நல்ல தருணங்களே. அமைதியும் ஆனந்தமும் வாழ்வின் உச்சக்கட்ட நிலை அல்ல. அவை வாழ்வின் தொடக்கமே.
அன்பு என்பது வெறும் பேச்சளவில் இருக்கக் கூடாது. அது செயல் வடிவம் பெற வேண்டும். மற்றவர்களுக்காக பொறுப்பேற்றுக் கொள்வது தான் உண்மையான அன்பின் அடையாளம் ஆகும். முழுமையான பொறுப்புணர்வில் தான் மனிதன் அற்புதமான அனுபவங்களைப் பெறுகிறான்.
- சத்குரு ஜக்கி வாசுதேவ்

Tuesday, September 14, 2010

ஒரு வேலையை வெற்றிகரமாகச் செய்து முடிக்க...


ஒரு நாட்டில் ஒரு இளவரசன் இருந்தான். அவன் சிறந்த போர் வீரன். அவனுடைய வாள் வீச்சிற்கு அந்த நாடே ஈடு கொடுக்க முடியாது. அந்த அளவிற்குச் சிறந்த வீரன். அவன் ஒருமுறை அரண்மனையில் வாள் வீசி பயிற்சி செய்துக் கொண்டிருக்கையில், ஒரு எலி குறுக்கே ஓடியது. உடனே அதன் மீது வாளை வீசினான். அந்த எலி லாவகமாக தப்பித்துச் சென்றது. பிறகு மீண்டும் அதனைத் துரத்தி வாளை வீசினான், மீண்டும் தப்பித்து வளைக்குள் புகுந்துகொண்டது.
உடனே மனம் உடைந்து போனான். அப்போது வந்த அரசர் "ஏன் சோகமாக இருக்கிறாய்?" என கேட்க "இந்த நாடே எனது வாள் வீசும் திறமைக்கு ஈடு கொடுக்க முடியாத போது, இந்தச் சாதாரண எலியை என்னால் கொல்ல முடியவில்லையே!" என விவரித்தான் இளவரசன். மன்னர் சிரித்துவிட்டு "எலியைக் கொல்ல வாள் பயிற்சி எதற்கு? அரண்மனைப் பூனையைக் கொண்டு வந்தாலே போதுமே!" என்றார்.உடனே அரண்மனை பூனை வரவழைக்கப்பட்டது. அந்தப் பூனையும் எலியை வேட்டையாட முயன்றது. ஆனாலும் அந்த எலி எளிதாக அதனிடம் இருந்து தப்பித்து, தப்பித்துச் சென்றது. மீண்டும் இளவரசருடன் அரசரும் சோகமானார்.
அப்போது மந்திரி வந்தார். "என்ன அரசே..நீங்களும் இளவரசரும் சோகமாக இருக்கிறீர்கள்?" என்றார். அதற்கு அரசர் நடந்ததை கூறினார். "நம் நாட்டு பூனைகள் எதற்கு லாயக்கு...? ஜப்பான், பாரசீகம் போன்ற நாடுகளில் உள்ள பூனைகள் புலி உயரம் உள்ளன. எனவே அங்கிருந்து வரவழைப்போம்" என்றார் மந்திரி. அதேபோல் அந்நாடுகளிலிருந்து இருந்து பூனைகள் வரவழைக்கப்பட்டன. ஆனால் அவற்றிடமிருந்தும் அந்த எலி சாமர்த்தியமாகத் தப்பித்துச் சென்று வளைக்குள் புகுந்தது.
எலிக்கு இவ்வளவு திறமையா! என அனைவரும் வியந்து கொண்டிருக்கையில், அங்கே இருந்த அரண்மனைக் காவலன் "இளவரசே! இந்த எலிக்குப் போய் ஜப்பான், பாரசீகப் பூனையெல்லாம் எதுக்கு? எங்க வீட்டுப் பூனையே போதும்" என்றான். மன்னருக்கு நப்பிக்கை ஏற்படவில்லை. "என்ன.. அரண்மனையில் வளர்ந்து வரும் பூனையால் முடியாதது சாதாரண பூனையால் முடியுமா?" என்றார். உடனே இளவரசர் மறித்து "சரி...எடுத்து வா உனது பூனையை" என்றார்.
வீட்டிற்குச் சென்று தனது பூனையைக் கொண்டு வந்தான் காவலன். அந்தப் பூனை அந்த எலியை ஒரே தாவலில் "லபக்" என்று கவ்விச்சென்றது. இதனைப் பார்த்த இளவரசருக்குப் பெருத்த ஆச்சரியம். "என்ன இது அதியசம்! ஜப்பான்,பாரசீக, அரண்மனையில் வளர்ந்த பூனைகளிடம் இல்லாத திறமை எப்படி இந்தச் சாதாரண பூனைக்கு ஏற்பட்டது? எப்படி சாத்தியம்? என்ன பயிற்சி கொடுத்துப் பூனையை வளர்க்கிறீர்கள்?" என்று வியந்தவாறே கேள்விகளை கேட்க தொடங்கினார். அதற்குக் காவலாளி "பெரிதாக என் பூனைக்குத் திறமையோ, பயிற்சிகளோ எதுவும் இல்லை இளவரசே... என் பூனைக்கு ரொம்பப் பசி அவ்வளவுதான்" என்றான். உடனே இளவரசருக்கு "சுரீர்" என்றது.
அரண்மனைக்குள் பூனைகள் நன்கு தின்று கொழுத்திருப்பதால் அவற்றுக்கு பசி என்பதே என்னவெற்று தெரிய வாய்பில்லை, எனவே அவற்றால் எலியை எப்படி பிடிக்கமுடியும்?. ஆக எந்த ஒரு வேலையையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டுமென்றால், முதலில் அதனைப் பற்றிய பசி அல்லது தேவை இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் காரியத்தைக் கச்சிதமாகச் செய்து முடிக்க முடியும்.

நன்றி: பால்ராஜ் ராஜா

Thursday, September 2, 2010

ஒழுங்கா பராமரிக்கிறீங்களா தலை முதல் கால் வரை எல்லாத்துக்கும் வயசாகுது

பளீச் என்று எரியும் பல்பாக இருந்தாலும், பைக்காக இருந்தாலும், வலுவாக இத்தனை மணி நேரம், இத்தனை நாள்தான் இயங்க முடியும். அதுபோலத்தான் நம் உடலும். உடலில் உச்சந் தலை முதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு முக்கிய உறுப்புக்கும் தனித்தனி வயது உண்டு.

பிரான்ஸ் மருத்துவ நிபுணர்கள் ஆய்வில் கிடைத்த ருசிகர தகவல்கள்:

மூளை: மூளையில் உள்ள நரம்பு உயிரணுக்களின் எண்ணிக்கை 10,000 கோடி; நமது ஒவ்வொரு எண்ணம், சொல், செயல்களுக்கு இவற்றின் கட்டளைகள் தான் காரணம். 20 வயது வரை தான் இதன் சுறுசுறுப்பு இருக்கும். 20 ல் இருந்து இதன் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும். 40 வயதில் இருந்து ஒரு நாளைக்கு 10,000 உயிரணுக்கள் வீதம் சரியும். நினைவாற்றல் உட்பட பல செயல்கள் செயலிழக்க இது தான் காரணம்.
குடல்: குடலுக்கு 55 வயது வரை தான் முழு ஆரோக்கியம். அப்போது குடல், கல்லீரல், சிறுகுடல், இரைப்பையில் ஜீரணத்துக்கான நொதிநீர் சுரப்பது குறைய ஆரம்பிக்கும். இதனால், அஜீரணம், வயிற்றுப்பிரச்னை போன்றவை தலைகாட்டும்.
மார்பகம்: பெண்களுக்கு மார்பகம் 35 வயதில் சுருங்க ஆரம்பிக்கும். அதன் தசைகள், கொழுப்புத்தன்மை குறைய ஆரம்பிக்கும்; அதனால், பருத்த மார்பகம் சுருங்க ஆரம்பிக்கும்.
சிறுநீர்ப்பை: இது வயசாவது 65 ல் ஆரம்பிக்கிறது. 30 வயதில் 2 கப் சிறுநீர் தேக் வைக்கும் அளவுக்கு கொள்ளளவு இருக்கும்; 65 ல் ஒரு கப் தான் தேங்கும் அளவுக்கு சுருங்கி விடும்.
நுரையீரல்: 20 வயது வரை தான் முழுவீச்சில் இயங்கும். அதன் பின், இடுப்பு எலும்பு பகுதி நெருக்கிக்கொள்ள, நுரையீரல் சக்தி குறைந்து, மூச்சு , உள்ளிழுத்து வெளியேவிடும் அளவு குறையும். 40 வயசுக்கு மேல், சில அடிதூரம் நடந்தால் மூச்சு வாங்குவதற்கு காரணம் இது தான்.
குரல்: தொண்டையில் உள்ள லாரினக்ஸ் என்ற மெல்லிய திசுக்கள் நீடிக்கும் வரை தான் குரலில் இனிமை இருக்கும். 65 வயதுக்கு பலவீனமாகி, குரல் ‘கரகர’ தான்.
கண்: பத்திரிக்கை படிக்கும் போதும், டிவி பார்க்கும் போதும் கண்களை இடுக்கி, பாடாய்ப்படுத்தி பார்ப்பர் சிலர்; அடடா, வயது 40 ஆகி விட்டது என்று புரிந்து கொள்ளலாம். அந்த வயதில் தான் பார்வை வலிமை குறைய ஆரம்பிக்கிறது.
இருதயம்: ரத்தத்தை உள்வாங்கி, மற்ற உறுப்புகளுக்கு அனுப்பும் சக்தி படைத்தது இருதய பம்ப்; ரத்தத்தை விரைவாக அனுப்பும் நெகிழ்திறன் கொண்ட இந்த பம்ப், 40 வயதில் பலவீனமடைய ஆரம்பிக்கிறது. அதனால், மற்ற உறுப்புகளுக்கு ரத்தம் பாயும் வேகமும் குறைகிறது.
கல்லீரல்: இந்த ஒரு உறுப்பு மட்டும் தான் 70 வயது வரை சூப்பர் இயக்கத்துடன் உள்ளது. குவாட்டரை நினைக்காதவரை இதன் பலம் ஆண்டுக்கணக்கில் நீடிக்கும்.
சிறுநீரகம்: ரத்தத்தை சுத்தப்படுத்தி பிரிக்கும் வேலையை இதன் ‘நெப்ரான்ஸ்’ என்ற திசுக்கள் செய்கின்றன. 50 வயதில் இது வலுவிழக்க ஆரம்பிக்கிறது.
எலும்புகள்: 25 வயது வரை தான் எலும்புகள் வலுவாக இருக்கும். அதன் பின் 35 ல் இருந்து பலவீனமடைய ஆரம்பிக்கும்.
பற்கள்: எச்சில் ஊறும் வரை தான் பற்களுக்கு வலிமை. பாக்டீரியாக்களையும் விரட்டியடிக்கும். நாற்பது வயதில் எச்சில் ஊறுவது குறைய துவங்கும். அதனால் தான் சிலரிடம் கப்ஸ்.
தசைகள்: முப்பது வயதில் தசைகள் 0.5 முதில் 2 சதவீதம் வரை ஆண்டுக்கு குறைய ஆரம்பிக்கும். தினசரி பயிற்சி, உடல் உழைப்பு தான் இதில் இருந்து காக்கும்.
தோல்: தோல்பகுதி, 25 வயதில் இருந்தே பலவீனமடைய ஆரம்பிக்கும்.
தலைமுடி: முப்பது வயதில் இருந்தே தலைமுடி கொட்ட ஆரம்பிக்கும்; வெள்ளை முடி தோன்றும்.

நன்றி: தினகரன்

Tuesday, August 31, 2010

சர்வம் – போலிகள் மயம்


போலி மார்க் சான்றிதழ்களை வழங்கி, பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் இடம்பெற முயன்ற மாணவர்கள் சிலர் பிடிபட்டுள்ளதையடுத்து, குற்றவாளிகளைப் பிடிக்க, காவல்துறை தனிப்படைகளை அமைத்துள்ளது. நாடு போய்க் கொண்டிருக்கிற நிலையில், அப்படியே முக்கிய குற்றவாளிகள் சிக்கினாலும், போலீஸ் விசாரணையில் அவர்கள் இப்படி பதில் அளித்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

உங்க தொழிலே போலி மார்க் சான்றிதழ்கள் தயாரிக்கிறதுதானா?”

இல்லைங்க. பல தொழில்களிலே அதுவும் ஒண்ணு. எந்த சர்டிஃபிகேட் வேணும்னாலும் எங்ககிட்டே கிடைக்கும். போலி பாஸ்போர்ட், போலி விசா, போலி பத்திரம், போலி முத்திரைத்தாள்னு நாங்க தயாரிக்காத டாக்குமென்டே இல்லை. பாக்கறதுக்கு ஒரிஜினலை விட நல்லாவே இருக்கும்” 

அடப் பாவிங்களா! உங்களுக்கு வேறே தொழிலே தெரியாதா?”

ஏன் தெரியாது? ஒரு காலத்திலே கள்ள நோட்டே அடிச்சவங்க ஸார் நாங்க. அங்கே எங்களை விட சீனியர்கள் இருந்தாங்க. அதான் போலி சர்டிஃபிகேட்கள் தயாரிக்கிற வேலையிலே இறங்கினோம்” 

கவர்மென்ட் செய்ய வேண்டிய வேலையை எல்லாம் நீங்க எப்படிய்யா செய்யலாம்? அது சட்ட விரோதம்னு தெரியாதா?”

என்ன ஸார் பேசறீங்க நீங்க? உங்க கவர்மென்ட்லே எந்த சர்டிஃபிகேட்டையாவது காலா காலத்துலே வாங்க முடியுமா? மைல் கணக்கிலே க்யூவிலே நின்னு, மாசக் கணக்கிலே இழுத்தடிச்சு, கண்டவங்களுக்கெல்லாம் லஞ்சம் கொடுத்துத்தானே எதையும் வாங்க வேண்டியிருக்குது? எங்ககிட்டே  அப்படியில்லை. எந்த சர்டிஃபிகேட்டும் கேட்டவுடனே கிடைக்கும். ஃபிக்ஸட் ரேட். மேற்கொண்டு பைசா தர வேண்டியதில்லை. மக்களுக்கு நீங்களும் நல்லது செய்ய மாட்டீங்க, நாங்களும் செய்யக் கூடாதுன்னா எப்படி?”
இதுக்கெல்லாம் உங்களுக்கு பணம் எங்கேயிருந்து கிடைச்சுது?”

போலி செக் கொடுத்து, பேங்க்லேர்ந்து பணம் வாங்கித்தான் முதல் போட்டேன்.

எப்படி ஒரிஜினல் மாதிரியே உங்களாலே போலிச் சான்றிதழ்களைத் தயாரிக்க முடியுது?”

நாங்க உங்களை மாதிரி சம்பளத்துக்கு வேலை செய்யறவங்க இல்லை ஸார். தொழில்லே அக்கறை இருக்கிறவங்க. அதனாலேதான் எங்களை ஒழிக்க அரசாங்கத்தாலே முடியலை. போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்கிறேன்னு புறப்பட்டீங்க. என்ன ஆச்சு? ஒரிஜினலையெல்லாம் ரத்து பண்ணிட்டு நிக்கறீங்க. தேவையா உங்களுக்கு இந்த வேலை?”

இப்ப நான் எந்த சர்டிஃபிகேட்டைக் கேட்டாலும் உடனே தர முடியுமா?”

என்ன ஸார் அப்படிச் சந்தேகப்படறீங்க? இப்பவே உங்களுக்கு போலி ப்ரமோஷன் ஆர்டர் போட்டுத் தரவா? யாரும் கண்டுபிடிக்க முடியாது. கோர்ட்டுக்குப் போனாக் கூடக் கவலையில்லை. அங்கேயும் எங்க ஆளுங்க இருக்காங்க. தேவைப்பட்டா போலி ஜட்ஜ்மென்டே வாங்கிக் காட்டறேன்” 

ஐயையோ... அதெல்லாம் வேண்டாம்” 
பயப்படறீங்க போல இருக்குது. சரி, பேங்க் லோன் எத்தனை லட்சம் வேணும்? பத்தே நிமிஷத்திலே எல்லா டாக்குமென்டையும் ரெடி பண்ணி, சேங்ஷனும் வாங்கிக் கொடுத்துடறேன்” 

யோவ்... கேக்கற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுய்யா! எப்படி உங்களாலே இதெல்லாம் செய்ய முடியுது?”

தனியா முடியுமா ஸார்? அததுக்குன்னு ஆள் வெச்சிருக்கோம். பேப்பர் வாங்கணும். ஸ்டாம்ப் செய்யணும். கையெழுத்துப் போடணும். பிரிண்ட் பண்ணனும். ஏஜென்டுங்க வெக்கணும். டிஸ்ட்ரிப்யூஷன் செய்யணும். டைப்பிஸ்ட், க்ளார்க், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், பி.ஆர்..ன்னு ஏராளமான பேருக்கு சம்பளம் கொடுக்கறோம். பாதி வருமானம் அதிகாரிகளுக்கு கமிஷன் கொடுக்கறதிலேயே போயிடுது. ஒரு தொழிலதிபர் ஆகறதுன்னா சும்மாவா?”

ஒரு சட்ட விரோத செயல்லே இத்தனை பேரையா ஈடுபடுத்தறீங்க?”

அதை ஏன் அப்படிப் பாக்கறீங்க? இந்தத் தொழில் மூலமா எத்தனை குடும்பங்களைக் காப்பாத்தறோம்னு பாருங்க. உங்க கவர்மென்டாலே இவங்களுக்கெல்லாம் வேலை கொடுக்க முடியுமா? ஆனா எங்களுக்கு இன்னும் ஆள் தேவைப்படுது. யாராவது இருந்தா சொல்லுங்க” 

உங்களாலே கவர்மென்ட்டுக்கு எவ்வளவு கெட்ட பேரு தெரியுமா?”

என்ன கெட்ட பேரு? சொல்லப் போனா, கவர்மென்ட் வேலையை நாங்க குறைச்சிருக்கோம். நான் கட்டற அளவுக்கு வருமான வரி நீங்க கட்டறீங்களா? அரசாங்கத்துக்கு உங்களாலே லாபமா? என்னாலே லாபமா? மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்க
மாட்டிக்குவோம்ன்ற பயமே இல்லையாய்யா உங்களுக்கு?”

நல்ல கேள்வி. இப்படித்தான் என் ஃப்ரண்ட் ஒருத்தன் பத்தாவதே பாஸ் பண்ண முடியாம கஷ்டப்பட்டுக்கிட்டிருந்தான். நான்தான் பரிதாபப்பட்டு டாக்டர் சர்டிஃபிகேட் வாங்கிக் கொடுத்து அவனை போலி டாக்டராக்கினேன். மாட்டிக்கிற மாதிரி சூழ்நிலை வந்ததும், டக்குன்னு அவனை போலி ஸி.பி.. அதிகாரியா மாத்திட்டேன்” 

நீ எப்படிய்யா இந்தத் தொழிலுக்கு வந்தே?”

அது பெரிய கதைங்க. எங்கப்பா பெரிய லட்சாதிபதியா இருந்தவருங்க. ஒருநாள் வருமான வரித் துறை அதிகாரிகள் நாலஞ்சு பேர் வந்து, வீட்டை சோதனை போட்டு எல்லாத்தையும் அள்ளிக்கிட்டுப் போயிட்டாங்க. அப்புறம்தான் அவங்க போலி வருமான வரித்துறை அதிகாரிகள்னு தெரிஞ்சது” 

போலீஸ்லே புகார் கொடுத்தீங்களா?”

கொடுத்தோம். குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க எங்கப்பா போலீஸுக்கு எக்கச்சக்கமா லஞ்சமும் கொடுத்தார். அப்புறம்தான் அவங்க போலி போலீஸ் அதிகாரிகள்னு தெரிஞ்சது.

ஐயையோ!” 
கவலையிலே எங்கப்பா சாராயம் குடிக்க ஆரம்பிச்சாரு. பாவம், அது கள்ளச் சாராயம்னு அப்ப அவருக்குத் தெரியலை” 

அப்புறம்?”

கள்ளச் சாராயம் குடிச்சதிலே உடம்பு கெட்டு, பலவிதமான வியாதிகள் வந்தது. டாக்டர் கிட்டே போனோம். வியாதி முத்தின பிறகுதான் அவர் போலி டாக்டர்னு புரிஞ்சுகிட்டோம்.

அடடா! நல்ல டாக்டர்கிட்டே போயிருக்கக் கூடாதா?”

நல்ல டாக்டரைத் தேடிக் கண்டுபிடிச்சுப் போனோம். அவர் எழுதி கொடுத்த மருந்தைத்தான் எங்கப்பா சாப்பிட்டார். ஆனா, அதெல்லாம் போலி மருந்துகள்னு எங்களுக்கு முதல்லேயே தெரியாமப் போச்சு...

அட கஷ்ட காலமே!

சாகறதுக்கு முன்னாலே எங்கப்பா என்னைக் கூப்பிட்டு, ‘மகனே... போலிகளாலே என் வாழ்க்கையே சீரழிஞ்சிடுச்சு. அதுக்கு நீ பழி வாங்கணும். போலிகள் மூலமாவே வாழ்க்கையிலே நீ ஜெயிச்சுக் காட்டணும்னு சத்தியம் வாங்கிக்கிட்டாரு
நீ என்ன பண்ணே?”

ஆரம்பத்திலே போலி பாக்கெட் தண்ணி, போலி மினரல் வாட்டர் தயாரிச்சு வித்தேன். வருமானம் போதலை. போலி லாட்டரிச் சீட்டு அச்சடிச்சேன். அரசாங்கம் தடை பண்ணிடுச்சு. திருட்டு வி.சி.டி. போட்டேன். போலீஸுக்கு கமிஷன் குடுத்து கட்டுப்படியாகலை. ரியல் எஸ்டேட் தொழில்லே இறங்கி, போலி மனைகளை வித்தேன். அதுலே எக்கச்சக்க போட்டி. சமாளிக்க முடியலை.

உனக்கு நல்ல சிந்தனையே வராதா?”

வந்ததுங்க. அதனாலேதான் எனக்குப் பதிலா இன்னொருத்தனை பரீட்சை எழுத வெச்சு, ப்ளஸ் டூ பாஸ் பண்ணேன். போலி அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் மூலம் தாசில்தார் ஆஃபீஸ்லே க்ளார்க்கா சேர்ந்தேன். ஆறே மாசத்திலே நானே போலி ப்ரமோஷன் ஆர்டர் போட்டுக்கிட்டு தாசில்தாராவே ஆயிட்டேன்...

அடப்பாவி!

இப்படி படிப்படியா முன்னேறும்போதுதான் மக்களுக்கு சேவை செய்யணும்ங்கற ஆசை வந்தது. அங்கேயே தொழில் நுணுக்கம் கத்துக்கிட்டு, போலி டிரைவிங் லைசென்ஸ், போலி ஜாதி சான்றிதழ், போலி இருப்பிடச் சான்றிதழ்னு மக்களுக்கு வேண்டிய சான்றிதழ்களை தயாரிக்க ஆரம்பிச்சேன். நல்ல வருமானம் வந்தது. தாசில்தார் வேலையை ராஜினாமா பண்ணி தொழிலதிபர் ஆயிட்டேன்.

உன்னை மாதிரி இந்தத் தொழில்லே இருக்கிற எல்லோருமே லட்சாதிபதிகள்தானா?” 
அப்படிச் சொல்ல முடியாதுங்க. போலி பஸ் டிக்கெட் அச்சடிச்சு கஷ்டப்படறவங்களும் எங்க தொழில்லே இருக்காங்க” 

போலிச் சான்றிதழ்களைத் தயாரிக்கிறது தப்புன்னு உங்களுக்குத் தோணவே இல்லையா?”

எதுங்க தப்பு? எங்க வளர்ச்சியைப் பார்த்துத்தான் இன்னைக்கு அரசாங்கமே க்ளோனிங் முறையிலே போலி ஆடு, மாடுகளைக் கூட உருவாக்க ஆரம்பிச்சிருக்குது. நியாயமா காபிரைட் சட்டப்படி அரசாங்கம் எங்களுக்கு நஷ்டஈடே கொடுக்கணும். போனாப் போகுதுன்னு நாங்க அதைக் கேக்கலை” 

யோவ் எதுக்கும் எதுக்கும் முடிச்சுப் போடறே?”

அதை விடுங்க ஸார். இப்ப தலைவர்களா இருக்கிற எல்லோருமே ஒரிஜினல்தானா? மக்களையும் தேர்தல் கமிஷனையும் ஏமாத்திட்டு, எத்தனை போலிகள் தலைவர்கள் ஆகியிருக்காங்க? அதைத் தடுக்க உங்களாலே முடியுதா? நாங்க ஏமாந்தவங்கன்னுதானே எங்களைப் பிடிக்கிறீங்க? எங்க விஷயத்திலே தலையிட்டா உங்களுக்குத்தான் பிரச்சனை” 

உன்னை மாதிரி ஆளுங்களை விட்டா இந்த சமுதாயத்துக்கே ஆபத்து. உங்களை எல்லாம் உள்ளே தள்ளாம விட மாட்டோம்” 

ஓஹோ! அவ்வளவு தூரத்துக்கு துணிஞ்சுட்டீங்களா? அப்ப பிடிங்க, உங்க சஸ்பென்ஷன் ஆர்டர். முடிஞ்சா, இதை போலின்னு நிரூபிங்க. மத்த நடவடிக்கைகளை எங்க மேலிடம் எடுக்கும்போது தெரிஞ்சுக்குங்க.

நன்றி: திரு. பஷீர் அஹமத் 

Sunday, August 29, 2010

தஞ்சை பெரிய கோவிலின் 1000 மாவது ஆண்டு நிறைவு சிறப்பு பதிவு...

தஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது பிரகதீசுவரர் கோயில் அல்லது தஞ்சை பெரிய கோயில், தஞ்சாவூரிலுள்ள இந்து சமயக் கோயிலும் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இக்கோயில், 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜசோழ மன்னனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்டகாலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக் கோயில், 17, 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் ஆகியது. தஞ்சைப் பெரியகோவில் எனவும் இக்கோவில் அறியப்படுகிறது.

இக்கோயில் கட்டப்பட்டபோதிருந்த காலம், சோழராட்சியின் பொற்காலமாகும். தமிழ்நாடு முழுவதும் ஒரே குடைக்கீழ் இருந்ததுடன், எல்லைக்கப்பாலும் பல இடங்கள் சோழப் பேரரசின் கீழ் இருந்ததுடன், பெருமளவு வருவாயும் கிடைத்துவந்தது. பெருமளவு ஆள்பலமும், அரசனின் சிவபக்தியோடு கூடிய ஆளுமையும், இத்தகையதொரு பிரம்மாண்டமான கோயிலை சுமார் 7 ஆண்டுகளில் கட்டிமுடிப்பதற்குத் துணையாக இருந்தது.

இன்று தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்கும் இது 1987ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

1006ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010ம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010வது ஆண்டோடு 1000 வயது பூர்த்தியாகின்றது.

தஞ்சைப் பெரியகோவிலில் உள்ள நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீ, நீளம் 7 மீ, அகலம் 3 மீ ஆகும். நந்தி மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.